கீதை சொல்லும் பாடம் ( பகுதி 4)

இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது :

” கீதை சொல்லும் பாடம் ”
(இறுதி பகுதி)

எல்லாமே ஏதோ ஒரு காரண காரியத்திற்காக நடக்கின்றது. உங்களுக்கு நன்மை நடந்தாலும் ஒரு காரணம் இருக்கின்றது. தீயது நடந்தாலும் ஒரு காரணம் இருக்கின்றது
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
எது நடக்கின்றதோ அது நன்றாகவே நடக்கின்றது
எது நடக்க இருக்கின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.
காரணம் இல்லாமல் ஏன் கவலைப்படுகின்றாய்?

ஆத்மா பிறப்பதும் இல்லை இறப்பதும் இல்லை.
ஆக இந்த தேவையற்ற மிரட்டும் கவலைகளை மறந்து விடுங்கள். உங்கள் செயலுக்கான வெற்றி கிடைக்கவில்லையா விட்டுத் தள்ளுங்கள். அன்பான உறவிலே திடீரென விரிசலா? வேதனைப்படாதீர்கள்.

உங்கள் எதிர் காலத்தினை பற்றி யோசிக்க வேண்டாம். கடந்த கால வேதனைகளில் மூழ்க வேண்டாம். இந்த நொடியினைப் பற்றி நினையுங்கள். நல்லதையே செய்யுங்கள்.

அரிய கருத்தினை கீதை நமக்கு கொடுத்துள்ளது. இதனை நடைமுறைபடுத்துவது எளிதல்ல. ஏனெனில் நம் உடலின் ஒவ்வொரு திசுக்களிலும் நாம் கவலையை ஏற்றி வைத்துள்ளோம். அதனையே அசை போட பழகியுள்ளோம். ஏமாற்றத்தினையே எதிர்பார்க்கும் வழக்கத்தினை உருவாக்கி வைத்துள்ளோம்.

கடைமயை செய்ய உனக்கு உரிமை இருக்கின்றது.
பலனை எதிர்பார்க்கும் உரிமை உனக்கு இல்லை.

பலனை, பரிசினை எதிர்பார்த்து ஒரு செயலினைச் செய்யாதே அல்லது எதுவுமே செய்யாமல் வெறுமனே இருந்து விடவும் எண்ணாதே.

எவருமே கிடைத்ததில் திருப்தி அடைவதே இல்லை. இதன் வலி அதிகமாகி கொண்டே இருக்கின்றது. இது தேவையற்றது. ஆக கடமையைச் செய்யுங்கள். பலனை எதிர்பாராது இருங்கள். மனம் வலியின்றி இருக்கும்.

பயமும், கவலையும் இரண்டு எதிரிகள் மனிதனுக்கு. ஆக இவை இரண்டும் மனிதனுக்குள் இருக்கக்கூடாது.
ஒருவர் வெறும் கையோடு இவ்வுலகிற்கு வருகிறார். வெறும் கையோடு இவ்வுலகை நீங்குகிறார்.

இன்று எது உன்னுடையதோ அது நாளை
வேறொருவருடையது பின் அடுத்த நாள்
அது மற்றொருவருடையது

ஏன் உலக பொருட்களோடு தீரா பற்றினை நாம் வைத்துள்ளோம். ஒரு பேனாவினைக் கூட மற்றவருக்காக நம்மால் விட்டுக் கொடுக்க முடியவில்லை. அப்படியிருக்க இத்தனை பொருட்களை நாம் எப்படி எங்கு கொண்டு செல்லப்போகிறோம்.

நரகத்திற்கு மூன்று வாசல்கள்
காமம், கோபம், பேராசை

சதா எதிலும் சந்தேகம் கொள்பவர் வாழ்வில் பலன் பெற முடியாது. முடியும் என்று நம்புங்கள் கண்டிப்பாய் முடியும். எதிலும் சந்தேகப்படுவருக்கு எந்த இடத்திலும் மகிழ்ச்சி கிடைக்காது

இவ்வுலகில் எதுவுமே நிலையானது அல்ல. பிறப்பவர் இறப்பார் இறப்பவர் பிறப்பார்.
எதற்கு ஆரம்பம் இருக்கின்றதோ அதற்கு முடிவு இருக்கின்றது.
ஒரு நாள் அழியப் போவதுதான் இந்த உடல்.

எல்லாவற்றிலும் என்னை பார்க்கின்றவனையும்
என்னில் எல்லாவற்றினையும் பார்க்கின்றனவனையும்
நானும் அவனை விடுவதில்லை.
அவனும் என்னை விடுவதில்லை.

தன்னைத்தானே வென்றவன் தனக்குத்தானே நண்பன். தன்னைத் தானே வெல்லாதவன் தனக்குத்தானே பகைவன் ஆகின்றான். தனக்குத் தானே நட்பாகும் பொழுது உலகம் முழுவதும் அவனுக்கு நட்பாகின்றது. .. அவ்வாறு இல்லாமல் தனக்குத்தானே பகை ஆகின்ற பொழுது உலகம் அவனுக்குப் பகை ஆகின்றது.

உடல் அழிய கூடியது. ஆத்மா அழிவதில்லை. உடலுடன் சம்பந்தப்பட்ட ஆசைகள் வேண்டாம். பலனை எதிர்பாராது வேலை செய்தால் வாழ்க்கை எளிதாக இருக்கும்.

நீங்கள் மிகப் பெரிய உத்தியோகத்தில் இருக்கின்றீர்களா அல்லது சாதாரண வேலையில் இருக்கின்றீர்களா என்பது பெரிய முக்கியமல்ல. எந்த சொத்துக்களும் உங்களோடு வரப் போவதில்லை. அனைவருமே அவரவர் காலத்திற்குப் பிறகு சாம்பலாகி விடுவர்.

நன்றாக ஆழ்ந்து பார்த்தால் புரியும். இந்த குருஷேத்திர யுத்தம் நம் முன் தான் நடக்கின்றது. நம் அறியாமை என்பது தான் கண்ணில்லா திருதிராஷ்டிரன் போல், தேர் தான் நமது உடல். நம் ஆத்மா இறைவனை சென்று அடைய வேண்டும். நம்முடைய கோபம், பொறுமை, காமம், குரோதம் இவை நம் எதிரிகள். இவைகளைத் தான் நாம் ஜெயிக்க வேண்டும்.

கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் இவற்றில் ஒன்றினை கடைப்பிடிக்க வேண்டும். இதில் பக்தி யோகம் கடை பிடிக்க எளிதானது.

வாழ்க்கை என்பது எளிதான பயணம் அல்ல. நமக்கு ஒவ்வொரு நொடியும் நம்மை வழிநடத்தி செல்ல ஒரு குரு ,ஆசிரியர் , நண்பன் தேவை. இவை அனைத்துமே இந்த பகவத் கீதை தான்.

பகவத் கீதை சுருக்கமாக எதை உணர்த்துகிறது என்பதை பார்ப்போம். “பற்றுகளை வளர்த்து கொள்ளாதே. சுயதர்மத்துக்காக பாடுபடு. ஈசனை எக்காரணத்திற்கும் மறக்காதே. சுயநலம் இல்லாத பக்தியை செலுத்து. இந்த மெய்ப் பொருளையே புகழிடமாகக் கொள்.

யாரையும் எதையும் வெறுக்காமல் இரு. எல்லாமே பிரம்ம உணர்வு என்று உணர்ந்து செல்.” என்று மனித வாழ்க்கைக்கு தேவையான உபதேசங்களை ஒரு குருவாக பகவத் கீதை உணர்த்துகிறது. இப்படி பகவத் கீதையை முழுமையாக படிக்க படிக்க ஒவ்வொரு முறையும் புதிய புதிய நல்ல கருத்துகள்-நல்ல சிந்தனைகள் தோன்றும்.

இப்படிபட்ட கீதயினை நீங்களும் படியுங்கள். இது தேன் போன்றது.
சுவையும் மருந்தும் போன்றது.

கீதையை நாம் படிக்கும்போது கண்ணன் மேல் நமக்கு ஏற்படும் பக்தி
பின் வரும் நாமாவளியின் வரிகள் போலவே ஏக்கத்துடன் கூடிய எதிர்பார்ப்பு போல அமைகிறது.

“குழந்தையாக மீண்டும் கண்ணன் பிறக்க மாட்டானா
புல்லாஙகுழல் ஊதி நம்மை மயக்க மாட்டானா

கீதயை தான் மீண்டும் கண்ணன் கூறமாட்டானா….
அதை கேட்டு நாமும் நல்லவராய்
மாறமாட்டோமா “……

” கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ணா ”

இத்துடன் ” கீதை சொல்லும் பாடம் ”
பகுதி நிறைவு பெறுகிறது.

லோகா சமஸ்தா சுகிநோ
பவந்து……..
……… ஸ்ரீ

.

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: