ராமாவதாரம் கிருஷ்ணாவதாரம்

ராமாவதாரத்துக்கும் கிருஷ்ணாவதாரத்துக்கும் ரசிக்கத்தக்க வேற்றுமைகள் உண்டு.

ராமன் நவமியில் பகல் வேளையில் அரண்மனையில் அவதாரம் செய்தான்.

கிருஷ்ணன் அஷ்டமியில் அர்த்த ராத்திரியில் சிறையில் அவதாரம் செய்தான்.

எண்களில் ஒன்பதை எப்படிப் பெருக்கினாலும் அது தன் நிலையில் மாறாது. அதைப் போன்றவன் ராமன்.

எட்டு என்ற எண், தன் நிலையில் பெருக்கும்போது குறுகிக் கொண்டே வந்து இறுதியில் மாயமாகி விடுகிறது. அதைப் போல தன்னை ஒளித்தும், நிதானம் காட்டி பின்னர் மாயையை விரட்டி தர்மத்தை நிலை நாட்டினான் கிருஷ்ணன். ஆகவேதான், ‘பகவத் கீதை’ என்ற உபதேசத்தை யுத்த பூமியில் விஜயனை முன்னிட்டு நமக்கெல்லாம் உபதேசம் செய்தான்.

ஒருவருக்கு நால்வராய் வாய்த்தது ராமாவதாரம்.

நால்வருக்கு ஒருவராய் நின்றது கிருஷ்ணாவதாரம்.

அதாவது, பிள்ளை இல்லையே என்று வருந்திய தசரதனுக்கு ராம, லக்ஷ்மண, பரத, சத்ருக்னன் என்று நால்வராக வாய்த்தது ராமாவதாரம். வசுதேவர், தேவகி, நந்தகோபர், யசோதை என்கிற நால்வருக்கும் – கண்ணன் என்ற ஒருவனே, மகவாய் வாய்த்தது கிருஷ்ணாவதாரம்.

ராமாவதாரத்தில் சீதைக்குப் புகழ் அதிகம். சிறையிலிருந்து புகழ் பெற்றாள் சீதை. அதைத் தோற்கடிக்கும் விதமாக பிறக்கும் போதே சிறையில் பிறந்து சாதனை செய்தது கிருஷ்ண சாமர்த்தியம்.

தூது போய் அனுமன் புகழ் பெற்ற சரிதம் ராமாயணம்.

அந்த தூதுப் புகழும் தனக்கே என்பதைக் காட்டியது கிருஷ்ணாவதாரம்.

எல்லாவற்றையும் விட மிக முக்கியம், இராமன், மனிதன் தெய்வமாகலாம் என்பதன் விளக்கம்.

கிருஷ்ணன், தெய்வமே மனிதனாக வரலாம் என்பதன் சுருக்கம்.

அதனால்தான் ராமனுக்கு விஸ்வரூபம் என்று எதுவும் இல்லை. கண்ணனுக்கு விஸ்வரூபம் என்பது சர்வ சாதாரணம்.

சூட்சுமமாகப் பார்த்தோமானால் கிருஷ்ணன் என்பது ஒரு சுவையான அனந்த நிலை, உத்சவ உற்சாகம், மன மோகன ஸ்வரூபம்….

கிருஷ்ணனுக்குப் பூப்போட்டு வணங்குவது மட்டும் பக்தியில்லை. தன்னையே ஒரு பூவைப் போல லேசாக்கிக் கொள்ளுதலே கிருஷ்ண அனுபவம்….

ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

 

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

 

 

 

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: