பூசலார் கட்டிய மனக் கோவில்


ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது மனக் கோவில் கட்டிய பூசலார்.

மனக்கோயில் கட்டியவருக்கு அருளிய சிவபெருமான்….

செல்வம் முக்கியமில்லை. மனமும் எண்ணமுமே முக்கியம் என்பதையும் அவருடைய பக்தியையும் உலகுக்கு உணர்த்த விரும்பினார் சிவபெருமான். அவர் மிகச் சிறந்த சிவபக்தர். எண்ணமும் செயலும் எப்போதும் சிவ நினைப்பிலேயே இருந்தது. எப்போதும் சிவநாமத்தையே சொல்லிக் கொண்டிருந்தார். அந்த பக்தர்…
அவர்தான் பூசலார்!

ஒருநாள் என் சிவனுக்கு ஒரு ஆலயம் கட்டினால் என்ன? என்று அவருக்கு தோன்றியது. ஆனால் கையில் காசு இல்லை. செல்வந்தர்களிடம் சிவ பக்தர்களிடம் பொருளுதவி கேட்டார். ஆனால் கிடைக்கவில்லை. இதில் நொந்துபோனார். அப்போதுதான் அவருக்கு அந்த யோசனை வந்தது. ஒரு பிரமாண்டமான சிவாலயத்தை, தன் மனதுக்குள்ளேயே கட்டத் துவங்கினார் பூசலார். ஆகம விதிப்படி ஒரு கோயில் எப்படி கட்டவேண்டுமோ அதன்படி, மனதுக்குள் கட்ட ஆரம்பித்தார்

ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு, கண்கள் மூடி, சிவனாரை வேண்டி, மளமளவென வேலைகளை மனதுக்குள்ளேயே வேலைகளை முடுக்கிவிட்டார். கோபுரம், விமானம், பலிபீடம், கொடிமரம் என பார்த்துப்பார்த்து மனதாலேயே கட்டிய ஆலயத்திற்கு குடமுழுக்கு செய்ய நாளும் குறித்தார் பூசலார்.

அதே வேளையில்… காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ராஜசிம்ம பல்லவ மன்னன், சிவனாருக்கு அழகிய, கருங்கல்லால் ஆன ஆலயத்தைக் கட்டி முடித்திருந்தான். கும்பாபிஷேகம் நடத்துவதற்கு நாள் குறித்தான்.

பூசலார் குறித்த நாளும் மன்னன் குறித்த நாளும் ஒரேநாளாக அமைந்தது. அங்கே… சிவனாரின் திருவிளையாடல் துவங்கியது! மன்னனின் கனவில் தோன்றிய சிவனார், ‘கும்பாபிஷேகத் தேதியை மாற்ற கூறினார். அதே நாளில் எனது பக்தன் கட்டிய கோவில் கும்பாபஷேகத்திற்கு  செல்வதாகவும் கூறினார்.

அதைக் கேட்டு அதிர்ந்தான் மன்னன். ராஜாவான நாம் கட்டிய ஆலயத்தை விட, அந்தக் கோயிலுக்கு முக்கியத்துவம் தருகிறாரே இறைவன் என சிந்தித்தவர், தன் படைகளுடன் திருநின்றவூருக்கு உடனே கிளம்பிச் சென்றான்.

அங்கே, அந்த ஊரில் எந்தக் கோயிலும் புதிதாகக் கட்டப்படவில்லை. ஊர்மக்களும் ‘இங்கே யாரும் கோயிலும் கட்டலை’ என்று தெரிவித்தனர். அப்படியே விசாரித்தபடியே வந்தவர், பூசலாரிடம் விஷயத்தைச் சொல்லிக் கேட்க, ‘ஆமாம், கோயில் கட்டி முடித்து, நாளைய தினம் கும்பாபிஷேகம் நடக்கப் போகிறது’ என்றார்

அதைக் கேட்டு குழம்பிய மன்னன், ‘அந்த ஆலயம் எங்கே’ என்று கேட்க, தன் நெஞ்சுப் பகுதியைத் தொட்டு, ‘இங்கேதான் இருக்கிறது கோயில்’ என்று, கோயில் கட்டுமானத்தின் முழுப்பணிகளையும் எடுத்துரைக்க… அதிசயித்த மன்னர், பூசலாரின் காலில் விழுந்து வணங்கினார்.

பூசலாரின் இறைபக்தியை உணர்ந்த மன்னன், அவரது வேண்டுகோளின் படி மனதில் கட்டிய ஆலயம் போலவே திருநின்றவூரில் ஆலயம் எழுப்பினான். பூசலாரும் நாயன்மார்களில் ஒருவரானார்! திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூரில் உள்ள அந்தக் கோவில் உள்ளது. அந்த கோவிலில் இருக்கும் இறைவன் தான் ஸ்ரீ இருதயாலீஸ்வரர்.

சிவ ! சிவ !  சிவ ! சிவ ! சிவ ! சிவ !

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

………ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: